ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று
ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ்(Dmitry Peskov) க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல அமெரிக்க செய்தி நிறுவனமான 'அசோசியேட்டடு பிரஸ்' இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,32,243 ஆக உயர்ந்துள்ளது. 43,512 பேர் குணமடைந்துள்ளனர். 2,116 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.