மியான்மரின் ராக்கைன் மற்றும் சின் மாகாணங்களில் ஆயுதக் குழுக்களுடன் அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ள சண்டை நிறுத்தத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ரகசிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு, மியான்மரின் இரு மாகாணங்களில் ஆயுதக் குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது. ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை ரோஹிங்கயா இனக் குழுக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனா்.