சிங்கப்பூரில் மேலும் 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 13 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,812 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதுவரை 11,198 பேர் சிகிச்சை பெற்று கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 38% ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று நாட்டில் கரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று உறுதியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.