கரோனா வைரஸால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஸ்பெயினில் 10 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷியாவைத் தொடர்ந்து ஸ்பெயின் நான்காம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அடுத்த 10 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜீசஸ் மான்டெரோ தெரிவித்தார்.தற்போதைய நிலவரப்படி, ஸ்பெயினில் 2,82,480 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,837 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில், நாட்டில் பொது கட்டடங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கூறினார்.