2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார்.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாள் மருத்துவத் துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும், மூன்றாம் நாள் வேதியியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் இந்த விருதினை பெறுகிறார்.
லூயிஸ் க்ளுக்
இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.