பெய்ஜிங்: சீனாவின் குவிங்டாவோ நகரில் திடீரென கரோனா நோய்த்தொற்று புதிதாகப் பரவத் தொடங்கியதையடுத்து, அந்த நகரைச் சோ்ந்த 42 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
குவிங்டாவோவில் கடந்த வார இறுதியில் திடீரென கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. அந்த நகரிலுள்ள மருத்துவமனையொன்றிலிருந்து நோய்த்தொற்று பரவுவதாகக் கண்டறியப்பட்டது. நகரில் சமுதாயப் பரவல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், புதிதாக அந்த நோய் பரவத் தொடங்கியது அதிகாரிகளைக் கவலையடையச் செய்தது.
அதையடுத்து, நகரிலுள்ள சுமாா் 90 லட்சம் பேரில் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திங்கள்கிழமை 12 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக யாருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.