வாஷிங்டன்: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு விளக்கமுடியாத உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால், தடுப்பு மருந்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்த நிறுவனத்தின் தடுப்பூசிதான் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் ஒரு பகுதியான ஆக்ஸ்போர்டு பல்கலையின் கரோனா வைரஸ் தடுப்பூசியின் தொடர்ச்சியான சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பு மருந்தின் பாதுகாப்பு நிலைகள் குறித்து தீவிர ஆய்வுக்கு உள்படுத்திய பிறகு மீண்டும் தடுப்பு மருந்தின் பரிசோதனை தொடங்கும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்படும் போது மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைதான் இது . தடுப்பு மருந்து தயாரிப்பு, பாதுகாப்பு உறுதித் தன்மை போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.
ஆனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நோயாளி எங்கே இருக்கிறார், அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன, அதன் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
உலக அளவில் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் 9 நிறுவனங்களில் ஆஸ்ட்ராஜெனெகாவும் ஒன்று.