வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் அமெரிக்காவிற்கே அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாக வடகொரியா உள்ளது. அந்நாட்டில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனைகள் பரபரப்பு செய்தியாவது வழக்கம்.
உலக அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள அமெரிக்காவும் வடகொரியாவும் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சாங்-மின் வெளியிட்ட அந்த செய்திக்குறிப்பை மறுக்கும் விதமாக வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட புதிய படங்களை வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.
இந்நிலையில் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், “ கிம் ஜாங் உன் நலமாக உள்ளார். அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் வுட்வேர்ட் என்பவர் எழுதியுள்ள 'ரேஜ்' என்ற புத்தகத்தில் வடகொரிய அதிபர் கிம் தனது சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் என்பது பற்றி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார் எனப் பதிவு செய்துள்ள நிலையில் இந்த சுட்டுரைப் பதிவை டிரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.