கரோனா தொற்று பாதிப்பால் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் விதித்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாகவே கரோனா பரிசோதனை மேற்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு உறுதியாகாதவர்கள் மட்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்பு உறுதியான வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த மூவரில் இருவர் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.