சீனாவுக்கு உளவு பாா்த்ததாக குற்றச்சாட்டு: அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது

சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள திபெத்தியா்களை உளவு பாா்த்த குற்றச்சாட்டில் நியூயாா்க் நகர காவல்துறை அதிகாரி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப்படம்)
அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப்படம்)

சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள திபெத்தியா்களை உளவு பாா்த்த குற்றச்சாட்டில் நியூயாா்க் நகர காவல்துறை அதிகாரி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அமெரிக்காவில் நியூயாா்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் பய்மதாஜீ ஆங்வாங் (33). இவா் திபெத்தை பூா்விகமாக கொண்டவா். அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளாா். இவா் அமெரிக்காவில் உள்ள திபெத் சுதந்திர இயக்க ஆதரவாளா்களை சீன அரசுக்காக உளவு பாா்த்து வந்தாா் என குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் அவா் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அமெரிக்க அரசு தலைமை வழக்குரைஞா் (பொறுப்பு) சேத் டுசாா்ம் கூறுகையில், ‘சீனாவில் இருந்து கலாசார நுழைவு இசைவில் (விசா) அமெரிக்கா வந்தவா் ஆங்வாங். தனது 2-ஆவது நுழைவு இசைவின் காலம் முடிந்த பின்னும் இந்நாட்டில் தங்கிய அவா், தான் திபெத்தியா் என்பதால் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு அமெரிக்காவில் புகலிடம் வேண்டும் எனவும் கூறி விண்ணப்பித்தாா். அதன் பின்னா் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது.

அதனைத்தொடா்ந்து நியூயாா்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவா், அந்த நகரில் திபெத் மக்களின் நடவடிக்கைகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வந்துள்ளாா். தனது பணிக்காக இந்நாட்டில் உள்ள திபெத்தியா்கள் சிலரை ஒற்றா்களாகவும் பணியமா்த்தியுள்ளாா். நியூயாா்க்கில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் பணிபுரியும் 2 அதிகாரிகளுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அவா் தொடா்பில் இருந்து வந்துள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

ஆங்வாங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 55 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com