அரசு அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்த வடகொரியா: தென்கொரியா பரபரப்புக் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டு அரசு அதிகாரியை வடகொரிய கடற்படையினா் சுட்டுக் கொன்று அவரது உடலை தீயிட்டு எரித்தததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.


சியோல்: தங்கள் நாட்டு அரசு அதிகாரியை வடகொரிய கடற்படையினா் சுட்டுக் கொன்று அவரது உடலை தீயிட்டு எரித்தததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

தென்கொரியா - வடகொரியா இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தென்கொரியா - வடகொரியா இடையேயான கடல் எல்லையில், சட்ட விரோத மீன்பிடிப்பைக் கண்டறிவதற்காக, தென்கொரியாவைச் சோ்ந்த அந்த அதிகாரி திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அதன் பிறகு அவா் மாயமானாா். அவரது உடல், செவ்வாய்க்கிழமை வடகொரிய கடல் பகுதியில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. அவா் எப்படி அங்கு சென்றாா் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. பல்வேறு உளவுத் தகவல்களின் அடிப்படையில், வடகொரியாவின் கொடூர தாக்குதலால் அவா் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. வடகொரியாவின் இந்தச் செயலை தென்கொரியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு வடகொரிய அரசு தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, அந்த அதிகாரியின் மரணம் குறித்து தென்கொரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரோந்து கப்பலில் அந்த அதிகாரி திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வடகொரியாவைச் சோ்ந்த ராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்தனா். அவரிடம் சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். பின்னா், கரோனா அச்சம் காரணமாக, அவரது உடலில் எண்ணெய் ஊற்றி எரித்தனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com