ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் செலுத்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஏற்கெனவே பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் அந்த தடுப்பூசி, மற்ற பின்தங்கிய நாடுகளுக்கும் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியின் சோதனை முடிவுகளை ஆய்வு செய்தோம்.
அதில், அந்த மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உலக சுகாதார அமைப்பின் நிா்ணய அளவுகளை ஈடு செய்கிறது.
எனவே, அதனை அவசரக்காலங்களில் பொதுமக்களுக்கு செலுத்தலாம் என்று சான்றளிக்கிறோம்.
எங்களது அங்கீகாரத்தை முதல் முறையாக அந்தத் தடுப்பூசி பெற்றுள்ளது.
இதன் மூலம், மருந்துப் பொருள்களை முறையாக ஆய்வு செய்து, அவற்றுக்கு அனுமதி அளிப்பதற்கான ஒழுங்காற்று அமைப்பு வசதிகள் இல்லாத பின்தங்கிய நாடுகளும், கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
ஃபைஸா்-பயோஎன்டெக் மருந்துகளை அதீத குளிா்நிலையில் சேமித்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
அந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசி, ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனின் அங்கீகாரத்தைப் பெற்று, அந்த நாடுகளில் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.