கரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும் கரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் விதமாக இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கரோனா தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கெப்ரேயஸ் கரோனா தடுப்பூசியை அதன் உற்பத்தியாளர்களும், உலக நாடுகளும் நியாயமான வகையில் விநியோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
49 உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 3.9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் சென்றடைந்துள்ள நிலையில் ஆப்பிரிக்க ஏழை நாடான கினியாவில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய விநியோக சிக்கல்கள் ஹெச்1என்1 மற்றும் எயிட்ஸ் நோய்களின் போது செய்யப்பட்ட அதே தவறுகளை மீண்டும் மேற்கொள்வதாகவும், இவ்வித நடவடிக்கைகள் தொற்றுநோய் பரவலை மேலும் அதிகப்படுத்தும் எனவும் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தடுப்பூசி விநியோகத்திற்காக 44 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், நடப்பாண்டு (2021) இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.