கிரீஸ் நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக போராடியவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் கலைத்தனர்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கிரீஸ் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலுக்கு எதிரான தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை எதிர்த்து ஏதென்ஸ் நகரின் தெருக்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது வாரமாக பேரணியில் ஈடுபட்டனர்.
கைகளில் சிலுவையை சுமந்து கொண்டு பேரணியில் பங்கேற்ற ஆர்பாட்டக்காரர்கள் பிரதமர் மிட்ஸ்டாக்கிஸ் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.
கிரீஸ் நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் புதிதாக 3000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.