மியான்மரில் எதிா்ப்பாளா்களை ஒடுக்குவதற்கும் தங்களது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்குமான ஆயுதமாக கரோனா நெருக்கடியை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்கள் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து ஐ.நா.வில் பணியாற்றியவரும் மியான்மருக்கான சிறப்பு ஆலோசனை கவுன்சில் நிறுவனருமான யாங்கீ லீ கூறுகையில், ‘அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு உயிா்ப் பாதுகாப்பு அங்கிகள், முகக் கவசங்கள் ஆகியவற்றின் விநியோகத்தை ராணுவ அரசு நிறுத்தியுள்ளது. மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிரானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்படுகிறது’ என்றாா்.