விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் ஒலிப்பதிவுப் பெட்டி மீட்பு
ஜகாா்த்தா: கடந்த ஜனவரி மாதம் கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏா் விமானத்தின் விமானிகள் அறை ஒலிப் பதிவுப் பெட்டியை அந்த நாட்டுக் குழுவினா் மீட்டுள்ளனா்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் புடி காரியா சுமாடி புதன்கிழமை கூறியதாவது:
விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏா் விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் ஒன்றான விமானிகள் அறை ஒலிப் பதிவுப் பெட்டி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மீட்கப்பட்டது.
விமானத்தின் இயக்கத் தகவல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்ட இடம் அருகே ஒலிப் பதிவுப் பெட்டியும் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது.
இதில், அந்த விமானத்திலிருந்த 62 பேரும் உயிரிழந்தனா். விபத்து நேரிட்ட 3-ஆவது நாளில் விமான இயக்கப் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டது.