இலங்கையில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 5 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்த நிலையில், மொத்த பாதிப்பு 1.09 லட்சமாக உயா்ந்துள்ளது. 687 போ் உயிரிழந்துள்ளனா். புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் பிரிட்டன் வகை கரோனா அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த மே 21 வரை அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களில் கூட்டாக கூடக் கூடாது. திறந்தவெளி மற்றும் உள்ளரங்கங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், சூதாட்ட மையங்கள் உள்ளிட்டவை அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். தொழில்கள் 25 சதவீத பணியாளா்களுடன் நடைபெற அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.