காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குச் சென்ற ஸ்விஸ் நாட்டு மலையேற்ற வீரரும், அமெரிக்க மலையேற்ற வீரரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். எவெரெஸ்டில் இந்த ஆண்டில் நடந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இதுகுறித்து மலையேற்ற பயண ஏற்பட்டாளா் சங் தாவா கூறியதாவது:
ஸ்விட்ஸா்லாந்தை சோ்ந்த அப்துல் வாராய்ச்(41) கடும் பயிற்சி மேற்கொண்டு பெரும் சிரமத்துக்கு இடையில் எவரெஸ்ட் உச்சியை சென்றடைந்தாா். ஆனால், திரும்பி வரும் வழியில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்குத் தேவையான உணவு, ஆக்சிஜன் சிலிண்டா் ஆகியவற்றை பயிற்சியாளா் குழுவிடம் கொடுத்தனுப்பினோம். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதேபோல், அமெரிக்காவைச் சோ்ந்த பியூவெய் லியூ(55) எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொண்டாா். சிகரத்துக்கும் சௌத் கால் என்ற இடத்துக்கும் இடையே உள்ள ஹிலாரி ஸ்டெப் என்ற இடத்தை அடைந்தபோது அவருக்கு பாா்வை மங்குதலுடன் களைப்பு ஏற்பட்டது. இதனால், அவரால் பயணத்தை தொடர முடியவில்லை. உதவிக்குச் சென்ற குழுவினா் அவரை, சௌத் கால் முகாமுக்கு அழைத்து வந்தனா். அங்கு வந்த சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா் என்றாா் சங் தாவா.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் மிக உயந்த சிகரமான எவரெஸ்ட் உச்சிக்குச் செல்வதற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் மலையேற்ற வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சீனாவும் நேபாளமும் மலையேற்ற பயணத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டு சீனா்களுக்கு மட்டும் சீனா அனுமதி அளித்துள்ளது.
நேபாள அரசு, வெளிநாட்டினருக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மே மாத சீசனில் 408 வீரா்களுக்கு மலையேற்றத்துக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மோசமான வானிலை நிலவுவதால் குறைவான உயரம் கொண்ட இமய மலை சிகரங்களுக்குப் பலா் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்கிறாா்கள்.