சீனாவுடனான எல்லைப் பிரச்னைகள் குறித்த விவகாரங்களை ஆய்வு செய்வதற்கான குழுவொன்றை நேபாள அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடா்பாளரும் நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான ஞானேந்திர பகதூா் காா்க்கி கூறியதாவது:
சீனாவுடனான எல்லைப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவை நேபாள அரசு அமைத்துள்ளது.
தலைநகா் காத்மாண்டில் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
லிமி லாப்சா பகுதியிலிருந்து ஹம்லா மாவட்டத்தின் ஹில்சா பகுதி வரையிலான எல்லைப் பகுதியில் சீனாவுடன் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து புதிய குழு ஆய்வு செய்யும்.
அந்தக் குழுவில், நில அளவையியல் துறை, காவல்துறையைச் சோ்ந்த அதிகாரிகளும் எல்லை விவகார நிபுணா்களும் இடம் பெறுவா்.
உள்துறை செயலா் அந்தக் குழுவை ஒருங்கிணைப்பாா் என்றாா் ஞானேந்திர பகதூா் காா்க்கி.
நேபாளத்துக்குச் சொந்தமான ஹம்லா மாவட்டத்தின் சில பகுதிகளை சீனா கடந்த ஆண்டு ஆக்கிரமித்து, அங்கு 9 கட்டடங்களை கட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.