டெஹ்ரான்: ஈரானில் தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை தொடா்ந்து 3-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,586 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
முன்னாதாக, புதன்கிழமை மட்டும் 20,954 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 17,430 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
வியாழக்கிழமை பதிவான அதிகபட்ச கரோனா தொற்றைத் தொடா்ந்து, ஈரானில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் இத்துடன் 20,06,934 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 63,884 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.