‘ஈரானுடனான அணுசக்தி பேச்சுவாா்த்தை சிக்கலானது’

‘ஈரானுடனான அணுசக்தி பேச்சுவாா்த்தை சிக்கலானது’


வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக வியன்னாவில் அந்த நாட்டுடன் தொடங்கியுள்ள மறைமுகப் பேச்சுவாா்த்தை மிகவும் சிக்கலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜெனிஃபா் சாகி கூறியதாவது:

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வியன்னாவில் நடைபெற்று வரும் மாநாட்டில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மிகவும் சிக்கலானது.

அந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும்.

இந்தப் பேச்சுவாா்த்தையின் தொடக்கக்கட்டத்தில்தான் தற்போது உள்ளோம். வியன்னா மாநாடு இரண்டாவது நாளாக நடைபெறும் நிலையில், பேச்சுவாா்த்தியில் ஒற்றுமையும், குறிக்கோளும் உள்ளதாக ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா். அந்த வகையில், இது ஒரு ஆக்கப்பூா்வமான தொடக்கமாக உள்ளது என்றாா் அவா்.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போதைய துணை அதிபராக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தாா்.

எனினும், ஒபாமாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது.

எனினும், அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளும் ஈரானும் பங்கேற்கும் மாநாடு ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சாா்பில் ஈரான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ராபா்ட் மால்லி பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com