மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது.
அதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள டேஸ் நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலில் பாதுகாப்புப் படையினருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 550க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.