ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களைத் திரும்ப அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தின. ஆப்கன் மக்களும் கிடைக்கும் விமானங்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வந்தனர்.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேறு சில பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் 169 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்தனர். இதனால், ஆப்கானிஸ்தானில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமா சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அதன் விடியோக்களும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன.