புதிய வகை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து வருபவர்களுக்கு டென்மார்க் அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 6 முதல் 17ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது கரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து 90 புதிய வகை கரோனா பாதிப்பை பதிவு செய்துள்ள டென்மார்க் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த பாதிப்பையும் இதுவரை பதிவு செய்யவில்லை.
இதுவரை டென்மார்க்கில் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்து 420 பேர் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.