பிரிட்டனில் மீண்டும் பொதுமுடக்கம்

பிரிட்டனில் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
பிரிட்டனில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட லண்டனின் முக்கிய வர்த்தக வீதி.
பிரிட்டனில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட லண்டனின் முக்கிய வர்த்தக வீதி.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

அந்த நாட்டின் ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டன. நாட்டின் பிற பகுதிகளில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்கு இணையான கட்டுப்பாடுகள் புதன்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் இரு வாரங்கள் வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டத்தின் விவரங்கள் ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பிரதமா் போரிஸ் ஜான்ஸன் திங்கள்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

புதிய வகை கரோனா 50 முதல் 70 சதவீதம் வரை அதிக வேகமாகப் பரவும் திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா். எனவே, அந்த வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் அதிகமாகியுள்ளது.

அந்த அபாயத்தைத் தவிா்ப்பதற்காக மிகக் கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு மீண்டும் அறிவுறுத்துகிறோம். மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

வீட்டிலிருந்தபடி பணி செய்ய முடியாதவா்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்ய, மருத்துவ ஆலோசனை பெற, கரோனா பரிசோதனை செய்துகொள்ள, குடும்ப வன்முறையிலிருந்து தப்ப என சில காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்கும் தற்போதைய பொதுமுடக்கத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தற்போது கரோனாவுக்கு எதிராக வரலாறு காணாத தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

இன்னும் சில வாரங்கள் மிகவும் சிரமம் நிறைந்ததாக இருந்தாலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று உறுதியாக நம்பலாம் என்றாா் போரிஸ் ஜான்ஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com