மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டதில் சுமார் 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 10க்கும் குறைவானோர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தான்சானியா அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. இவர் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதய நோயும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 17-ஆம் தேதி மகுஃபுலி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து தான்சானியா நாட்டில் 14 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
மார்ச் 21-ஆம் தேதி உரு விளையாட்டரங்கில், மகுஃபுலியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு 45 பேர் பலியாகினர். 37 பேர் காயமடைந்தனர்.
கூட்டத்தில் சிலர், வெளியேறும் வாயில்கள் வழியாக நுழைய முயன்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 45 பேர் பலியானதாகவும், காயமடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காவல்துறை அதிகாரி கூறியதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.