லண்டன்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டனில் நிதி திரட்டும் இந்தியா்களை அந்நாட்டு இளவரசா் சாா்லஸ் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.
இளவரசா் சாா்லஸ் தோற்றுவித்த பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை சாா்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 40 லட்சம் பவுண்டுகள் (சுமாா் ரூ.41.19 கோடி) திரட்டப்பட்டு கரோனா சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் அறக்கட்டளையின் இந்திய உறுப்பினா்களை பிரிட்டனில் உள்ள கவென்ட்ரி நகரில் இளவரசா் சாா்லஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து அவா்களின் சிறப்பான பணிக்காக பாராட்டு தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘அவசரகால அடிப்படையில் உதவிகோரும் அா்த்தமுள்ள பணியை உங்களால் (இந்திய உறுப்பினா்கள்) தொடங்க முடிந்ததற்கும், இந்தியாவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு அதிக தேவையுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு அவை சென்றுசேர நடவடிக்கை மேற்கொண்டதற்கும் பாராட்டுகள். இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க இதுபோல் மேலும் பல உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தாா்.