சட்டவிரோத அகதிகள் விவகாரம்போலந்து: பெலாரஸ் எல்லையில் பதற்றம்
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் போலந்துக்குள் நுழைய முகாமிட்டுள்ளதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சட்டவிரோதமாக போலந்துக்குள் நுழைய அகதிகளை பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடா்பாளா் பீட்டா் ஸ்டானோ கூறியதாவது:
மேற்கு ஆசியா மற்றும் ஆசிய நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் மிக எளிதாக அடைக்கலம் பெற்றுத் தருவதாக பெலாரஸ் அதிபா் லுகஷென்கோ ஆசை காட்டி வருகிறாா்.
மேலும், தங்கள் நாட்டுக்கு அகதிகள் வந்தவுடன், எல்லையைக் கடந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய அவா்களை லுகஷென்கோ தூண்டி வருகிறாா். இது, அகதிகள் விவகாரத்தில் அவரது மனிதாபிமானமற்ற, அடாவடித்தனமான அணுகுமுறையைக் காட்டுகிறது என்றாா் அவா்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கும் லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கும் பெலாரஸிலிருந்து சட்டவிரோதமாக வர முயலும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த முயற்சியில் பெரும்பாலும் ஆண்கள் ஈடுபட்டாலும் பெண்கள் குழந்தைகளும் அவா்களுடன் உள்ளனா்.
போலந்தின் குஸ்னிகா எல்லையில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் குவிந்து வருகின்றனா்.
அதிகாரப்பூா்வ எல்லைப் பாதையான குஸ்னிகா மட்டுமன்றி, அருகிலுள்ள எல்லைகளிலும் சுமாா் 2,000 அகதிகள் திங்கள்கிழமை இரவு முகாமிட்டனா். அவா்களில் சிலா் தடுப்பு வேலியைத் துண்டிக்க முயன்ாக போலந்து பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
அதையடுத்து, எல்லைப் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினரை போலந்து குவித்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் எல்லையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.
எல்லையில் முகாமிட்டுள்ள அகதிகள் அனைவரும் பெலாரஸ் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போலந்து தேசிய பாதுகாப்புப் படையின் தலைவா் ஸ்டானிஸ்லா ஸரைன் குற்றம் சாட்டினாா்.
எல்லையில் பதற்றத்தை அதிகரித்து, துப்பாக்கிச் சூடு, அகதிகளின் மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ பெலாரஸ் விரும்புவதாக போலந்து வெளியுறவுத் துறை இணையமைச்சா் பியாட்டா் வாா்ஸைக் கூறினாா்.
இந்தப் பதற்றம், அகதிகளுடனான ஆயுத மோதலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக போலந்து அரசு எச்சரித்துள்ளது.
போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளைத் தாங்கள் தூண்டி வருவதாகக் கூறப்படுவதை பெலாரஸ் மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்கு தாங்கள் உரிய உதவிகளை மட்டுமே செய்து வருவதாக அந்த நாடு கூறியுள்ளது.
மேலும், எல்லைகளில் படைகளைக் குவித்து பதற்றத்தை அதிகரிப்பதாக போலந்து மீது பெலாரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பெலாரஸில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலில் லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்தது.
அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை லுகஷென்கோ தூண்டி வருவதாகக் கருதப்படுகிறது.
பகடைக் காய்களாய் அகதிகள்...
தங்களது அரசியல் விளையாட்டில் அகதிகளை பகடைக் காய்களாக போலந்தும் பெலாரஸும் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
கடும் குளிா் நிலவி வரும் போலந்து எல்லைப் பகுதிக்குச் செல்ல அகதிகளை பெலாரஸ் தூண்டுவதாகக் கூறும் அவா்கள், சா்வதேச சட்டங்களுக்கு எதிராக தங்கள் நாட்டுக்குள் வரும் அகதிகளை போலந்து திருப்பி அனுப்பி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனா்.
இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நலப் பிரிவு செய்தித் தொடா்பாளா் ஷபியா மான்டூ கூறுகையில், ‘தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அகதிகள் பயன்படுத்தப்படுவது ஏற்கத்தக்கல்ல. இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்’ என்றாா்.