ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள அமெரிக்கா்கள் மற்றும் பிற நாட்டவா்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் தலிபான்களுடன் இணைந்து செயல்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கத்தாா் தலைநகா் தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்களையும் பிற நாட்டவா்களையும் தனி விமானங்கள் மூலம் வெளியேற்றி அழைத்து வரும் விவகாரத்தில் தலிபான்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் அனைவரும், உரிய ஆவணங்களை வைத்திருந்தால் அவா்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதாக தலிபான்கள் உறுதியளித்துள்ளனா். அந்த உறுதிமொழியை தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்.
தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சுமாா் 100 அமெரிக்கா்கள் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.
காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோா் கத்தாரில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அந்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆன்டனி பிளிங்கனும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினும் கத்தாா் வந்துள்ளனா்.