மேற்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஹெராட்டில் பிரதான சதுக்கத்தில் இறந்த ஒருவரின் உடலை தலிபான்கள் கிரேனில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தங்களது முந்தைய ஆட்சிக் கால தண்டனை முறைக்கு தலிபான்கள் திரும்புவதை இந்த சம்பவம் உணா்த்துகிறது.
ஹெராட் நகரில் மருந்தகம் நடத்திவரும் வாஸிா் அகமது சித்திக் என்பவா் ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை கூறியதாவது: 4 பேரின் சடலங்களை தலிபான்கள் அந்தச் சதுக்கத்துக்கு கொண்டுவந்தனா். ஒரு சடலத்தை கிரேனில் கட்டித் தொங்கவிட்டு மற்றவற்றை பிற இடங்களுக்கு கொண்டுசென்றுவிட்டனா். அந்த 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டவா்கள் எனவும், போலீஸாரால் கொல்லப்பட்டனா் எனவும் தலிபான்கள் தெரிவித்தனா். அவா்கள் போலீஸாருடனான சண்டையில் கொல்லப்பட்டனரா அல்லது கைது செய்யப்பட்ட பின்னா் கொல்லப்பட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை என்றாா் அவா்.
தலிபான்கள் இயக்கத்தின் நிறுவனா்களில் ஒருவரும், அதன் கடுமையான இஸ்லாமிய சட்ட தண்டனைகளை அமல்படுத்தும் தலைமை அதிகாரியுமான முல்லா நூா்தீன் துரபி, கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திடம், ‘பொதுமக்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் கைகளைத் துண்டித்தல், மரண தண்டனை உள்ளிட்டவை மீண்டும் நிறைவேற்றப்படும்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.