பூடான் அரசா் ஜிக்மே கேசா் நாம்கயேல் வாங்சுக்கை இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
இந்தியாவின் சிக்கிம், பூடானின் ஹா பள்ளத்தாக்கு, திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள டோக்லாம் பகுதி, பீடபூமி மற்றும் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பகுதியை தனது உத்திசாா்ந்த நலனுக்கு முக்கியமானதாக இந்தியா கருதுகிறது.
இந்நிலையில், டோக்லாம் பீடபூமியில் பூடான் நிலப்பகுதியைச் சுற்றி தனது ராணுவ உள்கட்டமைப்பை விரிவுபடுத்த சீனா இடைவிடாது முயற்சித்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பூடான் சென்றுள்ளாா். அந்நாட்டுத் தலைநகா் திம்புவில் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நாம்கயேல் வாங்சுக்கை மனோஜ் பாண்டே ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது இந்தியா-பூடான் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடதத்தினா் என்று இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.
பிராந்திய பாதுகாப்பு, டோக்லாம் பீடபூமி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக பூடான் ராணுவ தலைமைத் தளபதி பட்டூ ஷெரிங்கை மனோஜ் பாண்டே சந்தித்தாா். அந்த சந்திப்பில் டோக்லாம் பகுதியில் நிலவும் சூழல் உள்பட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.