மரியுபோலில் ரஷியப் படையினரால் கொலை செய்யப்பட்டவர்களை மறைக்க ரஷியா முயற்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக ரஷியப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே உக்ரைன் மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ‘இது நரகம். மரியுபோலில் ரஷியப் படையினர் ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை படுகொலை செய்ததை மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதும், காயமடைந்ததும் எனக்குத் தெரியும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து போரிட்டு வரும் ரஷியா, இன்று உக்ரைனின் கார்கீவ் பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தளம் மீது ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.