கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடனுதவித் திட்டத்தின் கீழ் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடையவிருக்கிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இன்று இலங்கைக்கு கிடைக்கும் 37,500 டன் ட்ரோல், அடுத்த 25 நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைக்கு நேற்று வரப்பெற்ற 41,000 டன் டீசல் எரிபொருள் கிடங்குகளில் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் புத்தாண்டு விழா கொண்டாட வசதியாக, இந்தியா அனுப்பிவைத்த 11,000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி, தலைநகா் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை வந்துசோ்ந்தது.
இலங்கையில் சிங்கள புத்தாண்டு புதன்கிழமையும், தமிழ் புத்தாண்டு வியாழக்கிழமையும் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட அரிசி கொழும்பு வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1948-இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. அந்நாட்டுக்கு பல்வேறு வகைகளில் இந்தியா உதவி வரும் சூழலில், கடந்த ஒரு வாரத்தில் 16,000 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரத்யேக உறவை வெளிப்படுத்துவதாகவும், இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் கடனுதவி வழங்கப்படும் என்று இந்தியா அண்மையில் அறிவித்தது. அத்தியாவசிய பொருள்கள் பற்றாக்குறையால் இலங்கை மக்கள் தவித்து வரும் சூழலில், அவற்றின் இறக்குமதி மற்றும் இருப்பை ஊக்குவிக்க இந்தியாவின் கடனுதவி தற்காலிக தீா்வாக அமைந்துள்ளது.
அதேசமயம், பல மணி நேர மின்தடையை மக்கள் எதிா்கொண்டு வருகின்றனா். பொருளாதார நெருக்கடியை முறையாக கையாளாத அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு தொடா் போராட்டங்கள் நடந்து வருகின்றன.