சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் கரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளதை அடுத்து அங்கு இந்தாண்டு முதல்முறையாக கரோனா பலி பதிவாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு அலைகளாக கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் பல இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து மீளாத நிலையில், சீனாவில் மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. தொற்று அதிகரிப்பின் காரணமாக ஷாங்காய் நகரில் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காய் நகரில் அங்கு 2,417 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு, அங்கு கரோனா முதல் பலி உறுதியாகியுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் (வயது 89-91) மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மூவரும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டுப்பாடுகள் அங்கு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.