நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் கரோனா பலி 10 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் இது மிகவும் துயரமான மைல்கல் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், 'கரோனா இன்னும் முழுமையாக ஓயவில்லை. உருமாறிய ஒமைக்ரான் கரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் இதுவரை கரோனா பலி 10 லட்சத்தை எட்டியுள்ளது.
ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் 70% மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், 136 நாடுகள் இதனை பூர்த்தி செய்யவில்லை. 66 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 40%க்கும் குறைவாக உள்ளது.
உலகில் 3ல் ஒரு பங்கு மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இதில் 3ல் 2 பங்கினர் சுகாதார ஊழியர்கள் மற்றும் வருமானம் குறைந்த நாடுகளில் 75% முதியோர் தடுப்பூசி செலுத்தவில்லை.
மிகவும் துயரமான மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். கரோனா பரவல் குறைந்துவிட்டது என்று எண்ண வேண்டாம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக கரோனா பரவி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தும் இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவில் இருந்து தற்கொத்துக்கொள்வது அவசியம்.
மேலும், அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து நாட்டு அரசுகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.