தென்கொரிய நாடகம் பார்த்த குற்றத்துக்காக, உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரண்டு சிறார்களுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடகங்களைப் பார்த்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட கொரியாவில் கே-டிராமா என்று கூறப்படும் கொரிய நாடகங்கள் பார்ப்பதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் ரையாங்கங் மாகாணத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறார்கள் கடந்த அக்டோபர் மாதம் பள்ளியில் சந்தித்துள்ளனர். இருவரும் சேர்ந்து தென்கொரிய மற்றும் அமெரிக்க நாடகங்களைப் பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவ்விரு சிறார்களுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் வெட்ட வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் இது பற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளிஉலகத்துக்குத் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வடகொரிய அரசு தெரிவித்திருப்பதாவது, இவ்விரு சிறார்களும் செய்தது மிக மோசமான குற்றம். அவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையை எச்சரிக்கும் விதமாக உள்ளூர் மக்கள் பார்க்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தந்தை இரண்டாம் கிம் ஜாங் நினைவுதினத்தை முன்னிட்டு 11 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அந்த நாள்களில் வட கொரிய மக்கள் சிரிக்கவும், கடைக்குச் செல்லும் குடிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.