இந்திய எல்லையில் சீனாவின் மோதல்போக்கால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குழு கருத்து தெரிவித்துள்ளனா்.
அண்மையில், அருணாசல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு நாட்டு எல்லைப் பிரச்னை மேலும் தீவிரமடையவும், இருநாடுகள் இடையிலான மோதல் போக்கு அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது.
இந்நிலையில் அமெரிக்க செனட் அவையின் இந்திய உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் நடைபெற்ற சம்பவம் இந்திய பிராந்தியத்துக்கு சீனா விடுத்த மற்றொரு அச்சுறுத்தலாக அமைந்தது. 2020-ஆம் ஆண்டில் இருந்து இந்திய எல்லையில் சீனா மோதல்போக்குடன் நடந்து கொள்கிறது. இதன் மூலம் இருதரப்பு ராணுவத்திலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்திய உறவுகளுக்கான குழு என்ற அடிப்படையில் இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ராணுவரீதியாக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ள சீனா, இந்திய பசிபிக் பிராந்தியம் முழுவதுமே தனது மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் அமைதிக்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இப்போது இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு, ராணுவ உறவு மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.