நேட்டோ அமைப்பு பாதுகாப்பு திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
"இன்று நேட்டோ அமைப்பின் பாதுகாப்புத் திட்டங்களை நாங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம். இது, தேவைப்படும்போது படைகளைக் குவிக்க ராணவ கமாண்டர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கிறது. உக்ரைனில் நேட்டோ படைகள் இல்லை. நோட்டோ பிராந்தியத்தில் அனைத்துக் கூட்டமைப்பின் கிழக்குப் பகுதியில் நேட்டோ படைகளை அதிகரிக்கிறோம்.
இதையும் படிக்க | உக்ரைனிலுள்ள இந்தியர்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு
எங்களது வான் பகுதியைப் பாதுகாக்க 100 ஜெட் விமானங்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளன. 120-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மெடிட்டெரனியனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூட்டணியைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நேட்டோ தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.
நேட்டோ அமைப்பு உக்ரைனுடன் துணை நிற்கிறது. உக்ரைன் மீதான படையெடுப்பை நேட்டோ கடுமையாகக் கண்டிக்கிறது. ரஷியா உடனடியாக தனது ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும்" என்றார் அவர்.