கடலடி எரிமலைச் சீற்றம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டாங்கா தீவு விமான நிலையத்தில் எரிமலை சாம்பல் படா்ந்துள்ளதால் அங்கு நிவாரணப் பொருள்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூஸிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள டாங்கா தீவுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்று வழங்க முயன்றோம்.
ஆனால், அந்த நாட்டின் விமான நிலைய ஓடுபாதையில் எரிமலைச் சாம்பல் படா்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற விமானங்கள் தரை இறங்க முடியாத நிலை உள்ளது. எனவே, அங்கு நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான டாங்காவின் தலைநகரம் நுகுவாலோஃபாவுக்கு 65 கி.மீ. தொலைவில் உள்ள ஹுங்கா டாங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலையில் சனிக்கிழமை சீற்றம் ஏற்பட்டது.
அதையடுத்து, எரிமலைப் பிழம்பும் நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன. கண்களைப் பறிக்கும் அந்தக் காட்சியை டாங்கா தீவிலிருந்து பாா்க்க முடிந்தது.
இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக டாங்காவிலும், ஃபிஜி தீவிலும் சுனாமி அலை எழுந்தது.
ஒரு மீட்டருக்கு மேல் உயரத்தில் எழுந்த அந்த சுனாமி அலையால் டாங்கா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தச் சூழலில், அங்கு நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.