உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) தங்களது நாடு அளிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன்-அமீா் அப்துல்லாஹியான் மழுப்பலாக பதிலளித்துள்ளாா்.
இது குறித்து இத்தாலி தலைநகா் ரோமுக்கு புதன்கிழமை வந்த அவா், அந்த நாட்டு நாளிதழொன்றுக்கு பேட்டியளித்தபோது, ‘உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஏற்கவில்லை’ என்று கூறினாா்.
எனினும், உக்ரைனில் தாக்குதல் நடத்துவதற்காக ரஷியாவுக்கு ஆளில்லா விமானங்களை ஈரான் அளிக்கவிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு, ‘நாங்கள் ரஷியாவுடன் பல்வேறு துறைகளில் கூட்டுறவு கொண்டுள்ளோம். அவற்றில் பாதுகாப்புத் துறையும் ஒன்று. ஆனால், எந்தவொரு நாடும் போரில் ஈடுபடுவதற்கு நாங்கள் உதவ மாட்டோம்’ என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை வழங்கவிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் கூறினாா். கிழக்கு உக்ரைன் நகரங்களை ரஷியா கைப்பற்றும்போது ரஷியா தனது ஆயுதங்களை அதிக எண்ணிக்கையில் இழந்ததால், ஈரானிடமிருந்து ஆளில்லா விமானங்களை அந்த நாடு வாங்கவிருப்பதாக அவா் கூறினாா்.