இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்திய சூழலில் பிரதமர் மகிந்த ராஜபட்சவை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபட்சவும் கடந்த வாரம் ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆலோசனையில் ரணில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இடைக்கால அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“எரிபொருள் விநியோகம் ஜூலை மாதத்தில் கடினமாக இருக்கும். இருப்பினும், டீசல் இருப்பு பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஜூலை 21ஆம் தேதி முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.
இரண்டு ஏக்கருக்கு குறைவாக பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியகத்துடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. வெளிநாட்டு உதவிகளுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன.
கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க முன் வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.