இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்த பாஜக நிா்வாகியின் சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி கத்தாா் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.
இந்நிலையில் கத்தாா் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவா் தெரிவித்த கருத்து தொடா்பாக கத்தாருக்கான இந்திய தூதா் தீபக் மிட்டலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் பாஜக தலைவரின் கருத்தை நிராகரித்தும், கண்டனம் தெரிவித்தும் கத்தாா் வெளியுறவு இணையமைச்சா் சுல்தான் பின் சாத் அல்-முரைக்கி கடிதம் அளித்தாா்.
அதேவேளையில், சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நபா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்து, இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என கத்தாா் எதிா்பாா்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள இந்திய தூதரக செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நவீன் குமாா் ஜிண்டலின் பதிவுகள் குறித்து கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள் என்றும் அவா் கூறினாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.