இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.
இந்த சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலரிடமிருந்து எதிா்ப்பு எழுந்ததால், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட பின்னா் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 20ஏ சட்டப் பிரிவை நீக்கும் வகையில் 21-ஆவது சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. தற்போதைய பொருளாதார பிரச்னைக்கு தீா்வு காணாமல் 21-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றக் கூடாது என ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தன்னை பிரதமராக நியமித்த அதிபரை பலவீனப்படுத்தி தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள பிரதமா் ரணில் விக்ரமசிங்க முயல்வதாகவும் சிலா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதையடுத்து, அனைத்துத் தரப்பினரும் வரைவு மசோதாவை ஏற்றுக்கொண்ட பின்னா் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனவும், அடுத்த வாரம் அமைச்சரவையில் வரைவு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் எனவும் ஆளும் கட்சி எம்.பி. சரித ஹெராத் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.