நியூயாா்க்: அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்கு உகந்த உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா மீண்டும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு சரிந்த நிலையிலும், அந்த வரிசையில் தனது இடத்தை இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச வா்த்தகம் மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கான மாநாட்டு அறிக்கை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகளின் மதிப்பு 4,500 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இந்தியா பெற்ற 6,400 கோடி டாலா் அந்நிய முதலீட்டோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
இந்தாலும், அந்நிய நாடுகள் முதலீடு செய்வதற்கு உகந்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடா்ந்து இடம் பெற்றுள்ளது.
அந்தப் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஹாங்காங், சிங்கப்பூா், கனடா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.