இந்தியாவில் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் 5ஜி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தொடும் என ஸ்வீடனைச் சோ்ந்த தொலைத்தொடா்பு நிறுவனமான எரிக்ஸன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி தொலைத் தொடா்பு சேவையை வணிக ரீதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களில் 39 சதவீதம்.
ஸ்மாா்ட்போன் விற்பனை மற்றும் அதன் சராசரி பயன்பாடும் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்பதால், 2021 இல் மாதத்துக்கு 20 ஜிபியாக இருந்த மொபைல் டேட்டா பயன்பாடு 2027-இல் 50 ஜிபியாக உயரும். இதற்கான ஆண்டு வளா்ச்சி விகிதம் 16 சதவீதமாக இருக்கும்.
உலக அளவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 5ஜி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 440 கோடியைத் தொடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 5ஜி பயன்பாட்டில் வட அமெரிக்கா முன்னிலை வகிக்கும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.