உக்ரைன் பாதுகாப்புப் படையினர் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக்கி, மனித கேடயமாக பயன்படுத்துவதாக ரஷிய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரைன் நகரங்களில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது. உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு வரும்படி அனைவருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
அண்டை நாடுகளுக்கு செல்வதற்காக ரயில் ஏறச் சென்ற இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டும் விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதரகம் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,
“தற்போது கிடைத்த தகவலில்படி, உக்ரைன் பாதுகாப்பு படையினரால் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு, அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். கீவ் நகர அதிகாரிகளே இதற்கு பொறுப்பு.”
இதையும் படிக்க | கெர்சன் நகரைக் ரஷிய ராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு
அதேபோல், ரஷிய பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்தியில்,
“உக்ரைனைவிட்டு எல்லைகளுக்கு வெளியேற் வந்த இந்திய மாணவர்கள் குழுவை உக்ரைன் அதிகாரிகள் கார்கோவ்வில் வலுகட்டாயமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ரஷிய ராணுவம் தயாராக உள்ளது. இந்திய மாணவர்களை மீட்டு சொந்த ராணுவ விமானம் அல்லது இந்திய விமானத்தில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்துள்ளோம்.”