கீவ்: உக்ரைனின் கீவ் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களின் கார் மீது ரஷிய படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் அதிகாரிகள் முகநூல் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
கீவ்வின் வோர்ஸெல் கிராமத்திலிருந்து 6 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ரஷியப் படையினர் இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில், காரில் வந்த பெண் மற்றும் 17 வயது சிறுமி கொல்லப்பட்டனர். மேலும், 7 வயது குழந்தை உள்பட நான்கு பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.