உக்ரைனிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கு அதிகமான அகதிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் சிக்கிக் கொண்ட பல்வேறு நாட்டு மக்களும் தங்களது நாடுகளுக்குத் திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று வருகின்றனர். உக்ரைனில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறக் கடுமையாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைனின் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து தங்களது சொந்த நாட்டுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்து, இதுவரை 10,00,000 பேர் உக்ரைன் எல்லையிலிருந்து தங்கள் நாட்டிற்குள் அடைக்கலம் தேடி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவர்களில் 1,06,400 பேர் பத்திரமாக அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலந்து அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், உக்ரைனிலிருந்து போலந்து நாட்டிற்குக் குடியேறிய சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று எல்லைக் காவலர் தனது சுட்டுரை பதிவில் தெரிவித்தார்.
பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் ராணுவப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரித்தார்.
போலந்து நாட்டில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு நீண்ட புகலிடமாக இல்லாமல் உக்ரேனிய அகதிகளைப் பாதுகாப்பதற்கான தற்காலிக பாதுகாப்பு உத்தரவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.