ஆசியாவின் மிகப்பெரிய யானையாக கருதப்படும் 69-வயதான ‘நதுங்கமுவே ராஜா’ திங்கள்கிழமை உயிரிழந்தது.
தன் உறவினரை குணப்படுத்திய இலங்கை துறவிக்கு மைசூா் மகாராஜாவால் பரிசாக அளிக்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளில் ‘நதுங்கமுவே ராஜா’வும் ஒன்று.
கண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெளத்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் புனித புத்தரின் பல் இந்த யானை மீது வைத்து கொண்டு செல்லப்படும். இதற்காக ராஜா தனது நதுங்கமுவே கிராமத்தில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள கண்டிக்கு நடந்தே செல்லும். அதற்கு ஆயுதம் ஏந்திய இலங்கை படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த யானையின்தந்தம் 10.5 அடி நீளமாகும்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த இந்த யானை, காம்பஹா மாவட்டத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தது. யானையின் மறைவுக்கு இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நதுங்கமுவே ராஜா யானையின் உடலை தேசிய சொத்தாக அறிவித்த அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச, வருங்கால சந்ததியினருக்காக யானையின் உடல் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளாா்.