உக்ரைனின், மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக துணை மேயர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள், தற்போது மரியுபோல் நகரையும் சூறையாடி வருகிறது. சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான மரியுபோலில் ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதுகுறித்து துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் கூறுகையில்,
மரியுபோல் நகரத்தில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். உணவு, தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்சாரம், நீர் விநியோகம், வெப்பமாக்கல் இல்லாமல் தவித்து வருகின்றனர். நகரத்தை விட்டு வெளியேற முடியாமல் பிணைக் கைதிகள் போல் சிக்கியுள்ளனர்.
செயற்கைக்கோள் படங்கள் வைத்து நகரத்தின் அழிவின் அளவை தெரிந்துகொள்ள முடிகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டன, வணிக மையம் மற்றும் ஒரு மகப்பேறு மருத்துவமனை தகர்க்கப்பட்டுள்ளன.
மேலும், முற்றுகையிடப்பட்ட வடக்கு நகரமான செர்னிஹிவின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. அங்குத் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகின்றது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது, நகரின் பெரும்பாலான பகுதிகள் வெளிச்சம் மற்றும் தகவல் தொடர்பு இல்லாமல் உள்ளது.
ரஷியப் படைகளால் சூழப்பட்டுள்ள மரியுபோல் நகரம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது என்று அவர் கூறினார்.